டோக்கியோ, செப்டம்பர் 7 — தேர்தல் தோல்விகளின் தொடர்ச்சியால் பிரதமர் ஷிகெரு இஷிபா ராஜினாமா அறிவித்ததை அடுத்து, ஜப்பானின் அடுத்த பிரதமர் யார் என்பதில் அரசியல் வட்டாரங்களில் தீவிரமான பேச்சுவார்த்தைகள் நடைபெறுகின்றன.
லிபரல் டெமோக்ராட்டிக் கட்சியின் முன்னணி வேட்பாளர்களில் சானாய் தகாயிச்சி முக்கியமாகக் குறிப்பிடப்படுகிறார். அவர் தேர்ந்தெடுக்கப்பட்டால் ஜப்பானின் முதல் பெண் பிரதமராக வரலாறு படைப்பார். இதேசமயம், இளம் தலைமுறையின் முகமாக விளங்கும் ஷின்ஜிரோ கோயிசுமி, சீர்திருத்த மனப்பாங்குடன் வலுவான ஆதரவைப் பெற்றுள்ளார். அனுபவமிக்க தூதுவரான யோஷிமாசா ஹயாஷியும் போட்டியில் முக்கிய வேட்பாளராகக் கருதப்படுகிறார்.
எதிர்க்கட்சிகளின் தரப்பிலும் முன்னாள் பிரதமர் யோஷிஹிகோ நோடா மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் யூயிச்சிரோ தமகி ஆகியோரின் பெயர்கள் பரவலாக பேசப்படுகின்றன. பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் பெரும்பான்மை இழந்துள்ள நிலையில், எதிர்க்கட்சிகள் ஆட்சியைப் பிடிக்கும் வாய்ப்புகளும் அதிகரித்து வருவதாக அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
புதிய பிரதமர் தேர்வு செய்யப்படும் வரை ஷிகெரு இஷிபா இடைக்கால பிரதமராகத் தொடருவார். ஆனால், அடுத்த அரசாங்கம் ஆட்சி நடத்துவதில் கடுமையான சவால்களை சந்திக்க வேண்டியிருக்கும் என மதிப்பிடப்படுகிறது.
















Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *